தமிழ்நாடு
பொறியியல் படிப்புக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு!
பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு செய்யும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது
தற்போது பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பதும் அதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது என்பதும், அதற்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றிருந்தால் அந்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது
இதுகுறித்து பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான புதிய வழிகாட்டுதலையும் உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பொறியியல் படிப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற கணிதம், இயற்பியல், மற்றும் ஆப்ஷனல் பாடங்களின் மதிப்பெண்கள், பன்னிரண்டாம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலந்தாய்வு நடத்தலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவிற்கு உயர் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
எனவே தரவரிசை பட்டியலில் ஒரே மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பொறியியல் படிப்புக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது