இந்தியா
70க்கு 80 மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள்: பெங்களூரு பல்கலையில் குளறுபடி!
பெங்களூரை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று எழுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு 80க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பிகாம் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அதில் டூரிசம் ஏஜென்சி மற்றும் டூர் ஆப்பரேட்டர் ஆர்கனைசேஷன் என்ற பாடப்பிரிவில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த மதிப்பெண்களை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இந்த தேர்வு 70 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு 89, 73, 75 என 70 க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற பாடங்களுக்கு 100 மதிப்பெண்களில் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இந்த ஒரு பாடத்திற்கு மட்டும் 70 மதிப்பெண்களுக்கு எழுதியுள்ளனர்.
இந்த தேர்வில் பல மாணவர்கள் 70க்கும் அதிகமான மதிப்பெண்களுக்கு பதில் எழுதியதும் அதனை தேர்வு தாள் திருத்தியவர்கள் சரியாக கவனிக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் அளித்து 70க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் திருத்தும் பதிப்பாளர் ஒருவர் கூறியபோது ’தேர்வு முடிவுகள் அனைத்தும் திரும்ப பெற பட்டுள்ளதாகவும் புதிய மற்றும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். 70க்கும் மேற்பட்ட மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதியதே இந்த குளறுபடிக்கு காரணம் என்றும் மேலும் மொத்த மதிப்பெண்கள் குறித்து பணியாளர்கள் கவனிக்க தவறி விட்டதாகவும் இந்த தவறு இனிமேல் நடக்காதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.