சினிமா செய்திகள்
வர்மா படத்தில் இருந்து பாலா வெளியேற்றம் – ரீஷூட் நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு!
தமிழ் சினிமாவில் சமீபத்தில் இப்படியொரு பெரிய அறிவிப்பு இதுவரை வெளி வந்ததே கிடையாது. மொக்கையாக படம் எடுக்கப்பட்டாலும், அதற்கு பவுடர் பூசி விளம்பரம் பேசி திரைக்கு கொண்டு வந்து தான் பழக்கம்.
ஆனால், முதன்முறையாக பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வர்மா படத்தின் மேக்கிங் பிடிக்கவில்லை என அதன் தயாரிப்பு நிறுவனமான ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நேற்று மாலை அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு, திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தனித்துவமான இயக்கத்திற்கு ஒரிஜினல் மற்றும் ரியாலிட்டி இயக்கத்திற்கு பெயர் போன பாலா இயக்கத்தில் குறையா? என ஆச்சர்ய கேள்விகளும் எழுந்து வருகிறது.
விஜய்தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பயங்கர ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கி வந்தார். படத்தின் முழு ஷூட்டிங் முடிந்து வரும் பிப்ரவரி 14ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் மேக்கிங் தங்களுக்கு திருப்தி இல்லை. அர்ஜுன் ரெட்டி படத்தை விட அருமையாக எடுத்து தருவார் பாலா என எதிர்பார்த்தால், சற்றும் சுவாரஸ்யமில்லாமல் போர் அடிக்கும் ஒரு படத்தை இயக்கியுள்ளார் என ஈ4 எண்டர்டெயின்மெண்ட் அறிவித்தது மட்டும் அல்லாமல், அவரை இந்த படத்தில் இருந்து வெளியேற்றியும் உள்ளது.
மீண்டும் ஒரு புது இயக்குநரை கொண்டு இந்த படத்தை முதலில் இருந்து எடுக்க உள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இப்படியான நிலைமைகள் நடந்திருந்தாலும் அவை மீடியாவுக்கு வரும் அளவுக்கு போயிருக்காது. அதுவும் சில பேட்ச் ஒர்க்குகள் தான் எடுப்பார்கள்.
இத்தனை கோடி செலவு செய்து எடுத்த படத்தை மீண்டும் ரீ ஷூட் செய்வதாக சொல்வது, பாலாவை முற்றிலுமாக டார்கெட் செய்து பிளாக் அவுட் செய்வதற்கே என்றும் தயாரிப்பு தரப்பிற்கும் பாலாவுக்கும் இடையிலான மோதலின் வெளிப்பாடே இந்த அறிக்கை என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
பாவம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகம் ஆகும் முதல் படத்திலா இப்படி நடக்க வேண்டும் எனவும் சிலர் ஆதங்கப்படுகின்றனர்.
இதற்கு விக்ரம் தரப்பில் என்ன பதில் வரும் என அனைவரும் எதிர் நோக்கியுள்ளனர். சேது மூலம் விக்ரமுக்கு வாழ்க்கை தந்த பாலா வெளியேறும் போது, அவரது மகன் புது இயக்குநர் நடிப்பில் மீண்டும் நடிப்பாரா? அல்லது துருவ் விக்ரமும் படத்தில் இருந்து வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.