தனியார் வேலைவாய்ப்பு
இனி வார சம்பளம்.. மகிழ்ச்சியில் பிரபல தனியார் நிறுவன ஊழியர்கள்!
பி2பி நிறுவனமான இந்தியா மார்ட், தங்களது ஊழியர்களுக்கு வார சம்பளம் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊழியர்களுக்கு வார சம்பளம் வழங்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய மார்ட் நிறுவனம், ஊழியர்களுக்கு வார சம்பளம் வழங்குவதால் அவர்களுக்கு நிதி பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால் நிறுவனம் வேகமாக வளர்ச்சியடையும். எனவே இப்படி ஒரு முடிவை இந்தியா மார்ட் நிறுவனம் செய்ய உள்ளது என தங்களது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற வார சம்பளம் கொள்கை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங் காங் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இது முதல்முறை.
பொதுவாக இந்தியாவில் மாத இறுதியில் அல்லது மாதத்தின் முதல் வாரத்தில் தான் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும். மணிநேரம் அடிப்படையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இருக்கும் நிறுவனத்தில் இதுபோன்ற வாரச் சம்பள முறை அதிக பயனளிக்கும் என கூறுகின்றனர்.
இந்தியா மார்ட் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் 2021 உடன் முடிவடைந்த காலாண்டில் 12.4 சதவீதம் சரிந்து 70.2 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2020-ம் ஆண்டு 80.2 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதேநேரம் நிறுவனத்தின் வருவாய் 8.3 சதவீதம் அதிகரித்து 1.88.1 கோடியாக உள்ளது. 2020-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இது 173.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது.