கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றியை ருசித்தது.
லீக் போட்டியின் 10-வது ஆட்டத்தில் நேற்று மேற்கிந்திய தீவுகள் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 17 ஓவர்களில் 79 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனால் ஸ்மித் மற்றும் கேரி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டது.
இந்த இணை அணி 147 ரன் எடுத்திருந்தபோது பிரிந்தது. பின்னர் வந்த நேதன் கோல்டர் நைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இன்னொருபுறம் ஸ்மித் பொறுமையான ஆட்டத்தை தொடர்ந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நேதன் கோல்டர் நைல் 60 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். பொறுமையாக விளையாடிய ஸ்மித் 73 ரன்கள் சேர்த்தார். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில், ப்ராத்வெயிட் 3 விக்கெட்டும், தோமஸ், கோட்ரெல், ரஸ்ஸல், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. ஆனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில், ஹோப் 68 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 51 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில், மிட்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 92 ரன்கள் விளாசிய நேதன் கோல்டர் நைல் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
அடுத்த போட்டி: பாகிஸ்தான் Vs இலங்கை
இடம்: ப்ரிஸ்டல்
நேரம்: மாலை 3 மணி