கிரிக்கெட்
2-வது டெஸ்டிலும் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி அபார வெற்றி!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. இந்த போட்டியிலும் மூன்றாவது நாளிலேயே வெற்றியை ருசித்துள்ள இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.
இதனையடுத்து 1 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது. யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் உணவு இடைவேளைக்கு முன்னரே ஆஸ்திரேலிய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இந்தியா. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தார். இதனையடுத்து 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்ததால் முதல் இன்னிங்சின் 1 ரன் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணிக்கு 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆரம்பத்திலே விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் பின்னர் வந்த அனைவரும் ஓரளவுக்கு சிறந்த பங்களிப்பை அளித்ததால் இந்திய அணி விரைவில் வெற்றி இலக்கை அடைந்தது. 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். முதல் டெஸ்ட் போட்டியிலும் இவரே ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.