கிரிக்கெட்
INDvENG – 100 ஆண்டு கால சாதனையை முறித்த தமிழக வீரர் அஷ்வின்… சுழலால் திணறும் இங்கிலாந்து – இந்தியா வெற்றி பெறுமா?
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், 100 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முன்னதாக இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா, இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. இதன் மூலம் இந்தியா, ஃபாலோ-ஆன் ஆனது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து, தனது முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தது. இது இங்கிலாந்து அணிக்குப் பேரிடியாக இறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து விக்கெட் ஆனார். இப்படி ஒரு டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட் எடுக்கும் சாதனை கடைசியாக 1907 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னர் 1888 ஆம் ஆண்டு இச்சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் 100 ஆண்டுகளையும் தாண்டி அதே சாதனையை அஷ்வின் நிகழ்த்தியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி, 119 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இன்னும் ஒன்றரை நாள் ஆட்டம் பாக்கியுள்ளதால் போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் எனத் தெரிகிறது.
இதே போட்டியில் இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, டேன் லாரன்ஸை விக்கெட் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300 விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார்.