சினிமா
அசுரன் விமர்சனம்… வெற்றி மாறன்… தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் கொடுத்திருக்கிறார்கள்…
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அடுத்து வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது படம் ‘அசுரன்’. வடசென்னை இரண்டு வகையான விமர்சனம் வந்த பிறகு இருவரும் வேறு ஏதாவது படம் பண்ணலாம் என யோசித்தபோது வெற்றி மாறன் கையில் எடுத்தது எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவல்.
ஊரில் ஒரு பிரச்னையில் மூத்த மகன் கொலை செய்யப்படுகிறார். பழி தீர்க்கும் விதமாக தன்னுடைய இளைய மகன் (கருணாஸ் மகன்) அந்தக் கொலைக்கு காரணமானவனை (ஆடுகளம் நரேன்) கொலை செய்துவிடுகிறார். முதல் மகனை கொலையில் இழந்த தகப்பன் (தனுஷ்) தன்னுடைய இளைய மகனையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவனை காப்பாற்ற ஊரை விட்டு வெளியேறும் தகப்பனின் கதைதான் அசுரன்.
அந்தப் பிரச்னை என்ன? கொலைக்கான காரணம் என்ன? கொலையில் இருந்து தப்பிக்க தனுஷ் என்ன செய்கிறார் என்பதை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.
‘வெக்கை’ நாவலின் நிலப்பிரச்னை காரணமாக சிவசாமியின் மகன் முருகன் வடக்கூரான் என்ற பக்கத்து ஊர் பணக்காரனால் கொலை செய்யப்படுகிறான். அதற்குப் பழி வாங்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்துவிடுகிறான். இந்தக் கொலையில் இருந்து தன் மகனை எப்படி சிவசாமி காப்பாற்றுகிறான் என்ற சரடையும் அந்த நாவலில் கூறப்பட்ட ஆண்டைகள் எனச் சொல்லிக்கொள்ளும் சாதி இந்துக்கள் தலித்துகளை எப்படி நிலத்தின் பெயரால் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் என்ற அரசியலையும் எடுத்துக்கொண்டு அசுரனை உருவாக்கியிருக்கிறார்.
பெரும்பாலும் ஒரு சிறுகதையையோ நாவலையோ கதையாக்கும்போது அதில் உள்ளதை அப்படியே கதை ஆக்க முடியாது. அப்படியே கதை ஆக்குவதில் உள்ள சிரமம் அதை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் வெற்றி மாறன். அதை விசாரணையிலேயே நாம் பார்த்துவிட்டோம். அதை மிக அழுத்தமாக இந்த அசுரனில் பதிய வைத்துள்ளார் வெற்றி மாறன்.
நாவலில் ஒரு சில காட்சிகளில் படத்தில் இருக்கின்றன. திரைக்கதைக்காக சில கிளைக்கதைகளையும் வசனங்களையும் சேர்த்துள்ளார் வெற்றி மாறன். ஆனால், அவை எதுவும் வெறுமனே படத்தில் இல்லை. படத்திற்கு அது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
பொறுப்பான அப்பா சிவ சாமியாக தனுஷ். படத்துக்குப் படம் தன்னுடைய முந்தைய படங்களின் தான் செய்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே செய்கிறார். எங்கும் அது துறுத்திக்கொண்டோ ஓவர் ஆக்டாகவோ இருப்பதில்லை. நம் காலகட்டத்தின் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகர் என்றால் அது தனுஷ் தான். வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. பொறுப்பான தந்தையாக தன்னுடைய குடும்பத்துக்காக எந்த அவமானத்தையும் தாங்கும் மனுஷனாக அதே நேரத்தில் குடும்பத்திற்கு ஒன்று என வரும்போது அசுரனாக மாறி தன் குடும்பத்தை காப்பாற்றும் மனுஷனாக என அசத்தியிருக்கிறார். வெறித்தனம் அவரது நடிப்பில் இருக்கிறது. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நம் காலத்தின் உன்னதமான படைப்பாளி வெற்றி மாறன் தான். அதில் மாற்றுக்கருத்திற்கே இடமில்லை. பள்ளிகளில் முதல்வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவன் கடைசிவரை முதல் மதிப்பெண் மட்டுமே எடுத்துக்கொண்டிருப்பான். அப்படி வெற்றி மாறன் எடுத்தாலே அது அட்டகாசமான படைப்புதான் என் முன் முடிவுக்கே வந்துவிடலாம். அசுரனில் எதுவுமே யாருமே வெற்றாக இல்லை. அந்த அளவிற்கு பார்த்து பார்த்து அதே நேரத்தில் மற்றவருடைய படைப்பின் ஆன்மா குறையாமலும் கொடுத்துள்ளார்.
கருணாஸ் மகன், மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ் என அனைவரும் தங்கள் கதாபத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். கருணாஸ் மகனுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.
படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் ஜீ.வி.பிரகாஷ். பாடல், பின்னணி இசை என வேறொரு பரிணாமத்தை தருகிறார். அதுவும் சண்டைக்காட்சியில் இவரது பின்னணி இசை ஆரம்பிக்கும்போது தியேட்டர் விசிலால் அதிருகிறது. அவ்வளவு அட்டகாசமான இசை. யாராவது அவரது காதில் போய் சத்தமாக நடிக்கவெல்லாம் வேணாம். இசை மட்டும் கொடுங்க ப்ளீஸ் என சொல்லிவிடுங்கள். உண்மையில் ஜீ.வி. ப்ளீஸ் நடிக்காதீங்க. எங்களுக்கு இசை அமைப்பாளர் ஜீ.வி.தான் வேணும் எங்களுக்கு.
1960களில் நடக்கும் கதைக்கு சரியான கலர் கொடுத்திருக்கிறார் வேல்கண்ணன். அது காடுகளில் ஆகட்டும், செவக்காட்டு மண்ணில் நடக்கும் சண்டையிலாகட்டும், பாத்திரங்களின் உணர்வுகளை படம் பிடித்தது ஆகட்டும் வேற லெவலில் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்.
நில அரசியல். தலித்துகளுக்கு கொடுத்த பஞ்சமி நிலத்தை சாதி இந்துக்கள் பிடிங்கிக்கொண்டு சொந்த நிலத்திலேயே எப்படி அடிமைகளாக நடத்தினார்கள். பிரச்னை இல்லை, தனக்கு கீழே ஒருவன் இருக்கிறான் என தெரியும் வரை அவனை சாதி, மதம் பார்க்காமல் பழகும் ஒருவன் அவன் தன்னைவிட மேலே செல்லும்போது எப்படி மிருகனாக மாறுகிறான் என்பதையும் அன்றைய காலகட்ட சாதி அரசியலையும் அட்டகாசமாக சொல்லியிருக்கிறது அசுரன். மேலும் படிப்பின் தேவையையும் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.
சாதி அரசியலை இப்போது மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து பேச வேண்டும். ஆனாலும் அது ஒழியாது. பெரியாராலேயே முடியாத சாதி ஒழிப்பு இனி யாரால் முடியும். ஆனால், அது கலையால் முடியும் என்பதை உணர்ந்து தற்போது பலரும் அதை தங்கள் படைப்புகளில் புகுத்த ஆரம்பித்துள்ளனர். ஆரோக்கியமாக இருக்கிறது தற்போதைய படைப்பு உலகம்.
குறையே இல்லையா என்று கேட்டால் சிலவற்றில் அதையெல்லாம் பார்க்க கூடாது. அந்தப் படைப்பின் தன்மையை உணர்ந்து அதை கொண்டாட மட்டுமே செய்ய வேண்டும். என்றாலும், ஒரு கொலை, கொலைக்கு பழி வாங்குவது. அல்லது பழிக்குப் பழி என்ற ஒரே கதையை மட்டும் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என வேறு வேறு பெயர்களில் வெற்றி மாறன் கொடுத்துக்கொண்டிருக்கிறார். மற்றொரு உறுத்தல் கதாபாத்திரங்களுக்கு லிப் சிங்க் ஆகவே இல்லை. அது தனுஷுக்கும் தான். ஆனால், இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
ஒரு படைப்பு அது நிறைவுற்ற பிறகும் உங்களை தொடர்ந்து வருகிறாதா என யோசியுங்கள். அப்படி அது உங்களை தொடர்ந்தால் அதைக் கொண்டாடுங்கள். அழகான படைப்பில் ஒரு சில சருகுகள் இருக்கும். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
பி.கு. நல்ல சவுண்ட் எபெக்ட் ஸ்கிரீன் உள்ள தியேட்டரில் படத்தைப் பார்க்கவும். நான் சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்தேன்.