இந்தியா
அசாம், மேற்குவங்க மாநிலங்களில் இன்று 2ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் அசாமில் 39 தொகுதிகளிலும் என மொத்தம் 69 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 171 பேர்களும் அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 345 பேர்களும் போட்டியிடுகின்றனர்.
சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் ஒருசில தொகுதிகளில் நக்சலைட்டுகள் ஆபத்து இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்பதும் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தவரை மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் 800 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் மக்கள் அனைவரும் பயமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.