இந்தியா
நான் மட்டும் கல்லூரியில் படித்திருந்தால்..? மாணவர்கள் மத்தியில் பேசிய கெளதம் அதானி!
கல்லூரி படிப்பை படிக்காமல் சிறு வயதிலேயே தொழில் தொடங்க ஆரம்பித்த கெளதம் அதானி, நான் மட்டும் கல்லூரியில் படித்து இருந்தால் இன்னும் வேகமாக முன்னேறி இருப்பேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் பல கோடீஸ்வரர்கள் கல்லூரி படிப்பை முடிக்காதவர்கள் என்பதும் குறிப்பாக ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஜான் கோம் ஆகியோர் கல்லூரி படிப்பை முடிக்காமல் தொழிலில் சாதித்தவர்கள் என்பது தெரிந்ததே.
அவ்வாறு கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு பிசினஸில் இறங்கிய கெளதம் அதானி இன்று இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும், உலகின் மூன்றாவது பணக்காரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஜராத்தில் உள்ள வித்யா மந்திர் அறக்கட்டளை வைர விழா கொண்டாட்டத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய அதானி, ‘இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் மற்றும் கடல் துறைமுகமாகவும் நாட்டில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனமாகவும் தனது நிறுவனம் மாறியுள்ளதாகவும் சிமெண்ட் உற்பத்தியில் அதிகமான மூலதனம் கொண்ட ஒரு கூட்டு நிறுவனம் தன்னுடையது என்றும் இவை அனைத்தும் 40 ஆண்டு காலத்தில் செய்த சாதனை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நான் 16 வயதாக இருக்கும்போது குஜராத்திலிருந்து ரயிலேறி மும்பைக்கு வந்ததாகவும் ஆரம்ப காலத்தில் தான் வைரங்களை வகைப்படுத்த கற்றுக் கொண்டு அதன் பிறகு முதன்முதலாக வைரத்தை வர்த்தகம் செய்தேன் என்றும் ஒரு ஜப்பானியரிடம் வைரத்தை வர்த்தகம் செய்த போது எனக்கு பத்தாயிரம் ரூபாய் கமிஷன் கிடைத்தது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் கல்லூரிக்குச் சென்று படிக்க வில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் என்றும் நான் மட்டும் கல்லூரி படிப்பை முடித்து இருந்தால் எனது அனுபவம் புத்திசாலித்தனம் மற்றும் கல்வி அறிவு ஆகியவற்றை இணைத்து என்னுடைய திறன்களின் விரிவாக்கம் இன்னும் வேகமாக இருந்திருக்கலாம் என்றும் நான் இப்போது உள்ள இடத்தை பத்து வருடத்துக்கு முன்பே அடைந்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.