கிரிக்கெட்
அஷ்வின் தான் உலகின் சிறந்த வீரர்: விருது வழங்கி கவுரவித்த ஐசிசி
பிப்ரவரி மாதத்தைப் பொறுத்தவரை உலகளவில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய அஷ்வின், தொடர் நாயகன் விருதையும் வென்றார். இந்த தொடரின் போது தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார் அஷ்வின்.
பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்தியாவின் அஷ்வின், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கையில் மேயர்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் இந்திய வீரர் அஷ்வின். மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக ஐசிசி தரப்பு தெரிவித்துள்ளது.