இந்தியா
கைதான ஆர்யனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: ஷூட்டிங்கை ரத்து செய்த ஷாருக்கான்!
போதை மருந்து பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து ஷாருக்கான் தனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பியுள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் லண்டனில் சினிமா சம்மந்தப்பட்ட படிப்பு படித்துள்ளார். இவர் விரைவில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் உல்லாச கப்பலான எம்பிரஸ் என்ற கப்பலில் பயணம் செய்ய ஷாருக்கான் மகன் ஆர்யன் சென்றிருந்தார். அந்த கப்பலில் போதை மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும் போதை பார்ட்டி நடைபெறுவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் வந்ததை அடுத்து போதை கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த கப்பலை சுற்றிவளைத்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் கோகைன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கப்பலில் போதை பார்ட்டியில் கலந்து கொள்ள அனைவரிடமும் விசாரணை செய்யப்பட்டது. ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் 20 மணி நேரம் விசாரணை செய்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் ஆர்யனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அனுமதி கேட்ட நிலையில் காவல்துறையினர் ஆர்யனை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று முதல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஷாருக்கான் தனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பி உள்ளதாகவும் அவர் இன்று தனது மகனின் ஜாமின் மனு குறித்த நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இன்று ஆர்யனுக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.