இந்தியா
வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை பணம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!
வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூபாய் 3000 பணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக சட்டமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருவது வழக்கமான ஒன்றாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ளது. அந்த வகையில் விரைவில் கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவா மாநிலத்தில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தற்போது அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக கோவா மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியில் உள்ளது என்பதும் பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் வலுவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவாவிலும் ஆட்சியை பிடிக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் சற்று முன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூபாய் 3000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்த குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 5000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கோவா மாநில மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.