இந்தியா
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!
இந்தியாவில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இரண்டாவது அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் இந்த இரண்டு அலைகளிலும் சேர்த்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் இதில் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிக மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவர்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வழங்கியுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கொரோனா காரணமாக உயிரிழந்த மருத்துவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பல மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்து இருப்பதாக கூறியுள்ளார்.
எனவே கொரோனா காரணமாக உயிரிழந்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்குவது தான் அவர்களுக்கு தேசத்தின் சார்பில் வழங்கப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தங்களது உயிரையும் குடும்பத்தினரையும் பற்றி கவலைப்படாமல் பாடுபட்டு வருவதாகவும் எனவே இதை விட அவர்களை பெருமை படுத்துவதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட அனைத்து இந்திய மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமருக்கு இந்த கோரிக்கையை வைக்க வேண்டுமென்றும் அவ்வாறு வைத்தால் கண்டிப்பாக கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.