தமிழ்நாடு
அருள்வாக்கு அன்னபூரணி நிகழ்ச்சிக்கு தடை: போலீசார் அதிரடி நடவடிக்கை!
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அருள்வாக்கு அன்னபூரணி என்று ஒரு பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய அருள் வாக்கு நிகழ்ச்சி ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நேருநகர் திருப்போரூர் கூட்ரோடு என்ற பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று அருள்வாக்கு கூறப் போவதாக அன்னபூரணியின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தன்னை தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணியை ஒருபக்கம் சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் அவரிடம் அருள் வாங்குவதற்காக முன்பதிவுகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என்று அன்னபூரணியின் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற இருக்கும் திருமண மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அருள்வாக்கு அன்னபூரணி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும் அந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய அறிவுரைகளை ஏற்கவில்லை என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தான் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மக்களை முட்டாள் ஆக்கும் வகையில் நான்தான் ஆதிபராசக்தி அவதாரம் என்று கூறுவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.