சினிமா

ராதிகா மற்றும் சரத்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடி வாரண்ட்!

Published

on

ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் படம் ஒன்றை தயாரிக்க பெற்ற தொகையை திருப்பி செலுத்தாததால் பிரபல நடிகை ராதிகா மற்றும் அவரது கணவரும் பிரபல நடிகருமான சரத்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ராதிகா சரத்குமாருக்குச் சொந்தமான ரேடான் மீடியா குரூப் நிறுவனமும் ரூ.2 கோடிக்கு மேல் பணம் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர்.

மேலும் இந்த தொகையைச் செலுத்துவதற்கு சரத்குமார் வழங்கிய காசோலைகள் அனைத்தும் செல்லாதவையாகியுள்ளன. இதனையடுத்து இவர்கள் மீது காசோலை மோசடி வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இதில் இந்த வழக்கின் விசாரணையில் நேற்று புகார்தாரர் ஆஜராகிய நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ராதிகா சரத்குமார், சரத்குமார் மற்றும் லிஸ்டன் ஸ்ட்டீபன் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் மூவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

seithichurul

Trending

Exit mobile version