தமிழ்நாடு
தேர்தலில் போட்டியில்லை: புதுக்கட்சி ஆரம்பித்த ரஜினி நண்பர் அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த நிலையில் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்த அர்ஜுனா மூர்த்தி என்பவர் ரஜினி ஆரம்பிக்கவுள்ள கட்சியில் இணைவதாக தெரிவித்தார், அவருக்கு ரஜினி தனது கட்சியில் முக்கிய பொறுப்பும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினி தனது உடல் நலம் காரணமாக கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அறிவித்தார். இதனை அடுத்து ரஜினியின் நெருங்கிய நண்பரான அர்ஜுனாமூர்த்தி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார் என்பது தெரிந்ததே.
இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயருடைய அவருடைய கட்சிக்கு ரோபோ சின்னத்தையும் அவர் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிட அவகாசம் இல்லை என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அர்ஜூனாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரோபோ சின்னம் கிடைக்கவில்லை என்றும், தேர்தல் பிரச்சாரம் செய்ய நேரம் இல்லை என்றும் அதனால் சட்டசபை தேர்தலில் இருந்து விலகி கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். அர்ஜுனா மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி ஆரம்பித்து அன்று ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.