தமிழ்நாடு
அரசியல் கட்சி ஆரம்பித்த அர்ஜூனா மூர்த்தி ரஜினிகாந்த் வாழ்த்து!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிப்பதாக கூறப்பட்ட நிலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு அர்ஜுனா மூர்த்தி என்பவரை நியமனம் செய்தார். அர்ஜுனா மூர்த்தி ஏற்கனவே பாஜகவின் முக்கிய பதவியில் இருந்த நிலையில் ரஜினியின் அழைப்பிற்கிணங்க அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் திடீரென ரஜினி தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார். மேலும் அவர் அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஜினிக்காகவே பாஜகவில் இருந்து வெளியே வந்த அர்ஜுனா மூர்த்தி தனிக் கட்சியை தொடங்கப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்த நிலையில் இன்று ’இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி’ என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.
அர்ஜுனா மூர்த்தி தனிக்கட்சி தொடங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில், ‘இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் திரு அர்ஜுனா மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.