தமிழ்நாடு

அரக்கோணம் தலித் இளைஞர்கள் கொலை: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை- நாளை விசிக மாபெரும் ஆர்ப்பாட்டம்

Published

on

அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொலைக்கு பாமக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை மாநிலம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தப் படுகொலைகளைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதரவாக பானை சின்னத்துக்கு அக்கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பாமக ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அதிமுக, பாமக சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அதிமுக – பாஜக- பாமக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோயில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.

தனது தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக எடப்பாடி பழனிசாமி சாதிவெறியர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததோடு தலித் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டும் காணாததுபோல் இருந்தார். அதன் விளைவே இந்தத் தாக்குதல்களும் படுகொலைகளும் இப்போது நடந்துள்ளன.

விசிக இடம் பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாத மதவெறியர்களும் சாதிவெறியர்களும் தமிழ்நாட்டைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலை.

இத்தகைய சூழலில் இதனை வன்மையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டுமென அனைத்து சனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version