தமிழ்நாடு

ஜெ. மரணத்தில் அப்பல்லோ எதையோ மறைக்க முயற்சிக்கிறது: விசாரணை ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்பதின் மூலம் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க முயல்வதாக உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இந்த ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இதற்கு தடைகேட்டும், 21 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது அப்பல்லோ மருத்துவமனை.

அப்பல்லோவின் கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தை அனுகியது அப்பல்லோ மருத்துவமனை. அங்கு ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில்மனு ஒன்றை தாக்கல் செய்தது விசாரணை ஆணையம். அதில், ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான வழக்கை விசாரணை ஆணையம் சரியான முறையிலேயே விசாரித்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் உள்பட யார் யாரை எல்லாம் அழைக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் அழைத்து நடுநிலையாக விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் அப்பல்லோ நிர்வாகம் மட்டும் தான் விசாரணைக்கு தடை கோருகிறது. அவர்களது கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. மருத்துவர்களை விசாரணைக்கு அனுப்ப அப்பல்லோ தயங்குவதிலிருந்து எதையோ மறைக்க அப்பல்லோ நிர்வாகம் முயற்சி செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டை அப்பல்லோ மருத்துவமனையின் மீது வைத்து மீண்டும் விசாரணையை தொடர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version