தமிழ்நாடு
வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு: அண்ணாமலை கண்டனம்!
வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ந்து தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று அறிவித்த அறிவிப்பு ஒன்றில் அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கும் என அறிவித்தது. மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என்று அறிவித்த தமிழக அரசு, அக்டோபர் மாதம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து இருந்தது.
இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் கடைகள் தினமும் பல மணி நேரம் திறந்து உள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ள உள்ள நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் வேண்டுமென்றே தமிழக அரசு அனுமதி மறுப்பதும், அதுவும் குறிப்பாக வார இறுதி நாட்களில் அனுமதி மறுப்பதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுகுறித்து கூறிய போது கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதை ஏற்க முடியாது என்றும், டாஸ்மாக், பள்ளிகளை திறக்க அனுமதி அளித்த அரசு, சாமி தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அதிருப்தியை அடுத்து விரைவில் வெள்ளி சனி ஞாயிறு அன்றும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசிடமிருந்து உத்தரவு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.