தமிழ்நாடு
அண்ணா பல்கலை புதிய பதிவாளர்: சிண்டிகேட் கூட்டத்தில் உதயநிதி!
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளரை தேர்வு செய்ய இன்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருக்கும் ராணி மரிய லியோனி வேதமுத்து என்பவர் பணி ஓய்வு பெற உள்ளார். இதனை அடுத்து புதிய பதிவாளர் தேர்வு செய்ய இன்று சிண்டிகேட் கூட்டம் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சிண்டிகேட் கூட்டம் கூட இருப்பதாகவும் இந்த கூட்டம் 263வது சிண்டிகேட் கூட்டம் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் யார் என்பதை சிண்டிகேட் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட உதயநிதி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் இன்றைய சிண்டிகேட் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட மாற்றம், தேசிய கல்வி கொள்கை, பேராசிரியர் நியமனம், நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் சேர்ந்து புதிய பதிவாளரை தேர்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.