தமிழ்நாடு
பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் 22 முதல் ஆன்லைனில் தேர்வு… அண்ணா பலகலைக்கழகம் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்குச் செப்டம்பர் 22 முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கணினி, லேப்டாப். மொபைல், டேப்ளட் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் தேர்வுகளை எழுத முடியும்.
தேர்வுக்கு ஒரு வாரம் முன்பாக மாக் டெஸ்ட் எனப்படும் பயிற்சித் தேர்வு நடைபெறும். இதையும் மாணவர்கள் ஆன்லைனிலேயே எழுதலாம். விரைவில் ஆன்லைன் தேர்வு குறித்து மாணவர்களுக்கு விரிவான வழிகாட்டு முறைகளும் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாகக் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இறுதி ஆண்டு மானவர்களுக்கான தேர்வுகளை மட்டும் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.
ஏற்கனவே மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு எழுதும் முறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முயற்சி எடுத்து வந்த நிலையில், அதற்கான மென்பொருள் தற்போது தாராக உள்ளதால் இறுதி தேர்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது.
அரியர் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு ஓர் இரு நாட்களில் தீர்வு வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.