தமிழ்நாடு
ராகிங்கில் ஈடுபட மாட்டேன்: பிரமாணப் பத்திரம் கேட்கும் அண்ணா பல்கலைக்கழகம்!
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என அண்ணா பல்கலைக்கழகம் பிரமாண பத்திரம் கேட்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ராகிங் பிரச்சனை காரணமாக முதலாமாண்டு படிக்கும் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பதும் ராகிங்கை கட்டுப்படுத்த வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களும் கண்டிப்பாக கூறிய போதிலும் இன்றும் பல கல்லூரிகளில் ராகிங் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இது குறித்த புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர் மற்றும் பெற்றோர் ஆகிய இருவரும் இணைந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.