தமிழ்நாடு
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு விடுமுறை: தள்ளிப்போகிறதா செமஸ்டர் தேர்வுகள்?
![anna university - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/anna-university.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அதை போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தேதி தள்ளிப் போகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை என அண்ணா பல்கலைகழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அனைத்து கொரோனா வைரஸ் விதிமுறைகளை அனைத்து கல்லூரி நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு நேரடி தேர்வு வைக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை முடிவு என்றும் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் நேரடி தேர்வுதான் நல்லது என்றும் கூறிய அமைச்சர் பொன்முடி அவர்கள் ஆனால் கொரோனா வைரஸ் பரவும் நிலையை பொருத்து ஆன்லைன் தேர்வா? அல்லது நேரடி தேர்வா? என்பது முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இணைய வழியில் மாணவர்களுக்கு நடந்த பாடம் நடத்துவது மற்றும் தேர்வுகள் நடத்துவது தரமானதாக இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.