இந்தியா
அம்பானி செல்போனும் உளவு பார்க்கப்பட்டதா?
பெகாசஸ் என்ற செயலி மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளிவந்த தகவல் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சனையை கையில் எடுத்து உள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர் என்பதும், கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் இதன் காரணமாக நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், முதலமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள், தேர்தல் வியூகம் அமைத்து கொடுப்பவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பெகாசஸ் செயலி மூலம் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடிக்கணக்கில் இதற்காக மத்திய அரசு செலவு செய்தது என்றும் எதிர்க்கட்சிகளின் திட்டங்களை அறிவதற்காக இந்த ஒட்டுக்கேட்பு நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஒடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் அனில் அம்பானி பெயரும் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் தலாய்லாமா ஆகியவர்களின் பெயரும் பட்டியலில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.