தமிழ்நாடு
எனக்கு மிகப்பெரிய மனஉளைச்சல், மிகப்பெரிய பாதிப்பு உள்ளது: அன்புமணி ராமதாஸ்!
பாமக வரும் மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுபோல அன்புமணியின் மைத்துனரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான விஷ்ணு பிரசாத்தும் பாமக கூட்டணியை விமர்சித்தார்.
இந்நிலையில் விஷ்ணு பிரசாத்தின் விமர்சனத்தால் அன்புமணி ராமதாஸ் மனஉளைச்சலில் உள்ளதாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, விஷ்ணு பிரசாத் எங்களை சமீபத்தில் விமர்சித்தார். அவருடைய விமர்சனத்தால் எங்கள் கட்சிக்கோ, கூட்டணிக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மனஉளைச்சல், மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
32 ஆண்டுகளாக விஷ்ணு பிரசாத்தை எனக்கு தெரியும். என்னுடன் கல்லூரியில் படித்தவர். 28 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனராக இருக்கிறார். என்னுடைய மகள்களுக்கு அவருடைய மடியில் உட்கார வைத்துதான் முடி எடுத்தோம். காதணி விழா நடத்தினோம். இப்படி அவர் விமர்சனம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இதனால் என்னுடைய மனைவிக்கும் மிகபெரிய மனவருத்தம் இருக்கிறது.
ஆனாலும் நாங்கள் விஷ்ணு பிரசாத்தை விமர்சிகப்போவது இல்லை. பொதுவாக திருமாவளவன் எங்களை விமர்சித்தால் தான் அவருக்கு அரசியல். அப்போது தான் அவருக்கு சீட்டு கிடைக்கும். ஒருவேளை விஷ்ணுபிரசாத்தும் அப்படி நினைத்துவிட்டார் போல. எங்களை விமர்சித்தால் அவருக்கு சீட்டு கிடைக்கலாம். ஆனால் ஒரு சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவு, பந்த பாசத்தை விட்டுக்கொடுப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை என அன்புமணி தெரிவித்தார்.