தமிழ்நாடு
மைக்கை புடுங்குங்க.. கேள்வி கேட்காதீங்க.. செய்தியாளர்களிடம் கொந்தளித்த அன்புமணி
சென்னை: எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு அமைதியாக உட்காருங்கள் என்று செய்தியாளர்களை பார்த்து பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கொந்தளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை சென்னையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக – பாமக கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம் அளித்தார்.
தொடக்கத்தில் அமைதியாக பேசிய அன்புமணி செல்ல செல்ல கோபமாக பதில்களை அளித்தார். இதனால் அங்கு கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக குறித்த கேள்விகளுக்குத்தான் அன்புமணி கோபமாக பேசினார். முக்கியமாக அதிமுக செய்த ஊழல் குறித்து அன்புமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது. குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு அதிமுக மீதான ஊழல் புகார்கள் குறித்து அன்புமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதேபோல் ஆளுநரிடம் முதல்வர் பழனிச்சாமி தொடர்பாக அன்புமணி அளித்த புகார்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இது தொடர்பான கேள்விகளுக்கு தொடக்கத்தில் அன்புமணி பட்டும் படாமல் பதில்களை அளித்து வந்தார். ஆனால் அது தொடர்பாக தொடர் கேள்விகளை கேட்டதும் கோபம் அடைந்தார்.