தமிழ்நாடு
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? ஆலோசனைக்கு பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
![anbil 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/anbil-1200.jpg)
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அதுகுறித்து ஆலோசனை செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கமளித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்தடுத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்க பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்கக அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
இதனையடுத்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.