இந்தியா
அமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 60-ஆக உயர்வு!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது ரயில் மோதியதில் பலர் உயிரழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதத்தின் போது ராவணன் உருவபொம்மையில் இருந்து பட்டாசுக்கள் வெடித்து மிகுந்த சத்தத்துடன் சிதறியது. இதனால் மக்கள் அலறியடித்து அருகில் இருந்த ரயில்வே கேட்டை நோக்கி ஓடினர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ரயில்வே தண்டவாளத்தின் மீது மக்கள் ஏறி நின்று ராவண வதத்தை பார்த்தனர்.
அப்போது அங்கு வந்த ரயில் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நின்ற மக்கள் மீது மோதி சென்றது. பட்டாசு சத்தம் அதிகமாக இருந்ததால் ரயில் வந்த சத்தம் கேட்காமல் இருந்துள்ளது. இதனால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அம்மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.