தமிழ்நாடு
குருமூர்த்தி தன்னை அதிமேதாவியாக பாவித்துக் கொள்கிறார் -டிடிவி தினகரன்
துக்ளக் ஆசிரியர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொள்வதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுக, அமமுக குறித்து பேசினார். அப்போது அவர் சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை நீருடன் ஒப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் குருமூர்த்தியைப் பற்றி டுவீட் செய்துள்ளார். அதில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல.
துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது’.
இவ்வாறு டிடிவி தெரிவித்துள்ளார்.