தமிழ்நாடு
பல இடங்களில் டெப்பாசிட் இழந்த அமமுக: என்ன செய்யப்போகிறார் தினகரன்!
இந்த தேர்தலில் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் டிடிவி தினகரன். அமமுக கட்சியின் பொதுச்செயலாளரான தினகரன் தான் இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் எனவும் சில இடங்களில் அவர் வெற்றிபெறவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டார்.
ஆனால் நேற்றைய தினம் வெளியான தேர்தல் முடிவுகள் அந்த யூகங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது. மக்களவை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் எதிலும் தினகரனின் அமமுக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அமமுக பெரிதும் எதிர்பார்த்த தேனி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சூலூர், திருப்பாரங்குன்றம், அரவக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மேலும் சில தொகுதிகளும் சறுக்கியது.
குறிப்பாக உறுதியான வெற்றி என சொல்லப்பட்ட தேனி மக்களவை தொகுதியில் அமமுக மூன்றாம் இடத்தை தான் பெற முடிந்தது. சில தொகுதிகளில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியை விட குறைவான வாக்குகளை வாங்கி 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது அமமுக. குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட அவர் பெற முடியாமல் பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் சூழலுக்கு சென்றுள்ளது அமமுக. இதனை எப்படி சமாளிக்க போகிறார் தினகரன் என்ற கேள்வி எழுந்துள்ளது.