தமிழ்நாடு
கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிப்பு!
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்து அதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை நிராகரிப்பார்கள். எந்த தவறும் இல்லாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமானால் அதனை ஏற்றுக்கொள்வார்கள். இதனையடுத்து பல தொகுதிகளில் வேட்பு மனுக்கள் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டது. இதில் கடலூர் தொகுதியில் அமமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக்கின் மனு நிராகரிக்கப்பட்டது.
கடலூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக்கின் வேட்புமனுவை நிராகரித்ததற்கு காரணமாக, முன்மொழிவு பத்திரம் தவறாக இருந்ததாக கூறப்படுகிறது. வேட்பாளரை முன்மொழிந்தவர்களில் இரண்டு பேருக்கு வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் உள்ளதால் மனு நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர் அமமுக மாற்று வேட்பாளர் காசி தங்கவேல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.