தமிழ்நாடு
நாளை அம்மா உணவகங்கள் இயங்குமா? சென்னை மாநகராட்சி அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 800 காவல்துறை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கண்காணிப்பார்கள் என்றும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை முழு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் அம்மா உணவகங்களில் நாளை போதுமான உணவுகளை இருப்பு வைத்து கொள்ள வேண்டும் என்றும் நாளை அதிக உணவுகளை தயாரிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எனவே நாளை முழு ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்றாலும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்பது ஏழை எளிய மக்களுக்கு நிம்மதியான ஒரு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.