இந்தியா

போலி எண்கவுண்டர் வழக்கில் தன்னை கைது செய்ததற்காக ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா?

Published

on

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை பழிவாங்குவதற்காகத்தான் அமித் ஷா இப்படி செய்வதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஆனால் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கூறியதையடுத்து அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரது டெல்லி வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர் அங்கு இல்லாததால் வீட்டில் நோட்டீஸை ஒட்டிச்சென்றனர். கைது செய்யப்படாமல் இருக்க அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதி ரமணா, இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் முற்றியுள்ளது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ப.சிதம்பரம் வெளிநாட்டிற்கு செல்லாமல் தடுக்கவே அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது ப.சிதம்பரம் 2010-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தபோது குஜராத் போலி எண்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காகவே தற்போது அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் போது ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

Trending

Exit mobile version