இந்தியா
அமித் ஷா கூறுவது பச்சைப்பொய்: கதவை உடைத்து வெளியே வந்த காஷ்மீர் தலைவர் பரபரப்பு பேட்டி!
![Amit Shah and Farooq Abdullah - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Amit-Shah-and-Farooq-Abdullah.jpg)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதே நேரத்தில் காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரமும் நேற்று மக்களவையில் வெடித்தது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா போன்ற காஷ்மீர் தலைவர்கள் என்ன ஆனார்கள் என கேள்வி எழுப்பினர். அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்களா என மக்களவையில் பேசினர். இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஃபரூக் அப்துல்லா காவலிலும் வைக்கப்படவில்லை, கைது செய்யப்படவும் இல்லை. அவர் தனது விருப்பப்படி வீட்டிலேயே இருக்கிறார் என்றார்.
அமித் ஷா இவ்வாறு கூறியுள்ள நிலையில், தனது வீட்டுக்கதவை உடைத்துவிட்டு வெளியேவந்து பேட்டியளித்துள்ளார் ஃபரூக் அப்துல்லா. அதில், நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறேன். ஒரு உள்துறை அமைச்சர் இப்படி பொய் சொல்வது வருத்தமளிக்கிறது. அவரது பேச்சு அடிப்படையற்றது. எனது வீட்டிற்கு முன் ஒரு டிஎஸ்பி நிறுத்திவைக்கப்பட்டுள்ளார். எனது மகளைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. எனது மகன் உமர் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ளார்.
நான் காவலில் வைக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சரே நாடாளுமன்றத்தில் சொல்லிவிட்டார். நீங்கள் யார் என்னை காவலில் வைக்க என்று காவலாளிகளிடம் கேள்வியெழுப்பினேன். பிறகே செய்தியாளர்களை சந்திக்க வந்தேன். என்னை அனுமதித்ததற்காக எத்தனை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எனக்கு தெரியவில்லை என்றார் பரபரப்பாக.