உலகம்
ஜானின் உடலை மீட்க சென்ற போலீசார்.. அம்பு எய்தி ஓட விட்ட சென்டினல் ஆதிவாசிகள்.. திக் திக் நிமிடம்!
சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் உடலை மீட்க சென்ற அதிகாரிகள் சென்டினேலீஸ் மக்களால் துரத்தப்பட்டுள்ளனர்.
அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும். இங்கு உள்ள சென்டினேலீஸ் மக்களுக்கு வெளியுலக மனிதர்களை பிடிக்காது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்த தீவிற்கு சென்ற போது ஜான் ஆலன் என்று அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார்.
ஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் தேதி அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்டினேலீஸ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டு துன்புறுத்தி கொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை மீட்பதற்காக நேற்று மாலை போலீஸ் படை ஒன்று அந்த தீவிற்கு சென்றுள்ளது. 2 மீனவர்கள், 4 போலீசார் என்று 6 பேர் கொண்ட படை அந்த தீவிற்கு சென்றுள்ளது.
போலீஸ் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் சென்டினேலீஸ் மக்கள் போலீசாரை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். அதோடு போலீசாரை நோக்கி அம்புகளை எய்தி இருக்கிறார்கள்.
இதையடுத்து போலீசார் அங்கிருந்து மீண்டும் வெளியே தப்பித்து வந்தனர். சென்டினேலீஸ் மக்கள் மிகவும் கோபத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு இருக்கும் ஜானின் உடலை இதனால் இரவில் மீட்கலாமா என்று யோசித்து வருகிறார்கள்.