உலகம்
24 நாட்கள் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த அதிசய மனிதன்.. பிரபல நிறுவனம் தரும் ஆச்சரிய பரிசு..!
24 நாட்கள் தன்னுடைய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு பிரபல நிறுவனம் ஒன்று ஆச்சரிய பரிசளித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கரீபியன் தீவில் உள்ள செயின்ட் மார்டன் என்ற துறைமுகத்தில் உள்ள பாய்மரக் கப்பலை சரி செய்யும் பணியில் பிராங்கோஸ் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் தனது படகில் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென வானிலை மோசமானதால் கடலில் அடித்து செல்லப்பட்டார். அவர் தனது படகு கடலில் மூழ்காமல் இருக்க பல முறைகளை கையாண்டார் என்றும் தன்னிடம் இருக்கின்ற சாப்பாட்டை வைத்து அவர் 24 நாட்கள் உயிர் பிழைத்ததாகவும் தெரிகிறது.
24 நாட்கள் நிலம் இல்லை, யாருடனும் பேசவில்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை, நான் எங்கே இருக்கிறேன் என்றும் எனக்கு தெரியவில்லை, அது மிகவும் ஒரு கடினமான காலம் என்றும் நான் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழந்தேன் என்றும் என் குடும்பத்தை பற்றி நான் நினைத்து கவலைப்பட்டேன் என்றும் அவர் மீட்கப்பட்ட பிறகு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது படகில் ஒரு தீயை ஏற்படுத்தி அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு தகவல் கொடுக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. மேலும் தனது படத்தின் மேற்பகுதியில் உதவி என்ற வார்த்தையை எழுதி யாராவது உதவி செய்வார்களா என்று காத்திருந்தார். இந்த நிலையில் ஜனவரி 15ஆம் தேதி அவர் ஒரு விமானத்தை பார்த்ததாகவும் தன்னிடம் உள்ள ஒரு கண்ணாடியை வைத்து சூரிய ஒளியை அந்த விமானத்தின் மூலம் செலுத்த முயன்றதாகவும் அதுதான் தனக்கு பயன் அளித்ததாகவும் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 24 நாட்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர் தன்னிடம் சில நூடுல்ஸ் மற்றும் மசாலா பொருட்கள் மட்டுமே இருந்ததாகவும் அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு தன்னை காப்பாற்றிக் கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவருடைய துணிச்சலையும் மன உறுதியையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் அவருடைய படகு மிகவும் மோசமான நிலையை அடைந்து விட்டதால் அந்த படகை இனிமேல் பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அமெரிக்க உணவு நிறுவனம் அந்த நபருக்கு புதிய படகை தங்களுடைய செலவில் வாங்கி தருவதாகவும் உயிர் பிழைத்த அந்த மனிதருக்கு தாங்கள் கொடுக்கும் பரிசு என்றும் தெரிவித்துள்ளது.