உலகம்
திடீரென 800 விமானங்களை ரத்து செய்த அமெரிக்க ஏர்லைன்ஸ்: என்ன காரணம்?
அமெரிக்க ஏர்லைன்ஸ் திடீரென 800 விமானங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதும் தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து மீண்டும் அனைத்து நாடுகளிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் என்ற பகுதியில் கடந்த வாரம் வீசிய புயல் காரணமாக நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
புயல் காரணமாக விமான ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணிக்கு செல்வது சிரமம் ஏற்பட்டுள்ளதால் கடந்த வியாழக்கிழமை முதல் மிகவும் குறைவான பணியாளர்களே பணிக்கு வந்ததாகவும் இதனால் அமெரிக்க ஏர்லைன்ஸ் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் 800 ரத்து செய்துள்ளதாகவும் இன்றும் 400க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் நாளை முதல் விமான சேவை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஏர்லைன்ஸ் சி.இ.ஓ தெரிவித்துள்ளார். இதே புயல் காரணமாக சௌத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 2000 விமானங்களை ரத்து செய்துள்ளது என்பதும், இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.