தமிழ்நாடு
வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் மோதலில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பதற்றம்!
![Vedaranyam - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Vedaranyam.jpg)
வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் புதிதாக அங்கு அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாண்டியன் என்பவரது காரை 10 பேர் கும்பல் வழிமறித்து காருக்கு தீ வைத்தனர். இதனால் கார் முற்றிலும் எரிந்து நாசமாகியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எதிர் தரப்பை சேர்ந்த கும்பல் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் சிலையை முழுமையாக சேதப்படுத்தி உடைத்து தரைமட்டமாக்கினர். இந்த சிலை உடைக்கப்பட்ட காட்சியை ஒரு வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளார். இது வேகமாக பரவி அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள காவல்நிலையமும் இந்த சம்பவத்தின் போது தாக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி மாதாக் கோவில் திருவிழாவுக்கு காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளதால் காவலர்களால் இந்த வன்முறை சம்பவத்தை தடுக்க முடியவில்லை. இதனையடுத்து வேறு பகுதிகளில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.