உலகம்
17000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. அதிர்ச்சியில் அமேசான் ஊழியர்கள்
கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது என்பதும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்ததாலும் சில நிறுவனங்களின் லாபம் குறைந்ததாலும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் இதில் கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான ஊழியர்களை தேர்வு பணிகள் நடைபெற்று வந்ததாகவும் சரியாக வேலை பார்க்காத ஊழியர்கள் கூடிய விரைவில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி அமேசான் நிறுவனத்தில் 17 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது உறுதி செய்யப்பட்ட தகவல் என்று கூறப்படுவதால் அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதமே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் வேலை இழக்கப்போகும் 17 ஆயிரம் ஊழியர்கள் யார் யார் என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் வருவாய் குறைந்து வருவதாகவும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் செலவினங்களை குறைப்பதற்காகவும், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும் இந்த வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது அமேசான் நிறுவனம் 17 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.