சினிமா
சித்ரா நடித்த ‘முல்லை’ ரோலில் நானா..? – “ஆயுத எழுத்து” சரண்யா உருக்கமான பதில்
சித்ரா நடித்த ‘முல்லை’ ரோலில், ‘ஆயுத எழுத்து’ சரண்யா நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் உலாவி வந்தது. அது குறித்து தற்போது சரண்யாவே விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருவதனால், தமிழக காவல் துறை அது குறித்து தொடர்ச்சியாக விசாரித்து வருகிறது. குறிப்பாக சித்ராவின் கணவராக இருந்த ஹேம்நாத்திடம் தொடர்ந்து நான்காவது நாளாக போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்னும் நாடகத்தில் சித்ரா, முல்லை என்ற கேரக்டரில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. அவரது கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்தனர். அப்படி சித்ராவிற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்து வந்த ரசிகர்கள் மத்தியில் அவரின் இறப்புச் செய்தி பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. சித்ராவின் இறப்பில் பல மர்ம முடிச்சிகள் இருப்பதனால், அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ரசிகர்கள் மேலும் மனமுடைந்து போயிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து ஷூட் செய்ய ஏதுவாக, முல்லை கேரக்டரில் யாரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டு வந்ததாம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி சித்ராவுக்கு பதிலாக ‘ஆயுத எழுத்து’ சீரியலில் நடித்த சரண்யா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வந்தது.
இந்த தகவல் குறித்து சரண்யா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்த முல்லை கேரக்டரில் நான் நடிக்கப் போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது உண்மையில்லை. முல்லை கேரக்டரில் வேறு ஒருவரைப் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தனது அசாத்திய நடிப்பின் மூலம் முல்லை கேரக்டருக்கான மதிப்பைப் பெற்றவர் சித்ரா. அது என்றன்றைக்கும் நினைவில் கொள்ளப்படும். அதை நான் மதிக்கிறேன். எனவே அந்த கதாபாத்திரம் அப்படியே இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.