தமிழ்நாடு
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் என்பதும் அதாவது ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் ஜனவரி 16 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது என்பதும் அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் அறிவிப்பின்படி ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் முழு ஊரடங்கு தினத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு இல்லை என்றும் எனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று மாலை 3 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் ஆன்லைன் மூலம் இந்த முன்பதிவை மாடுபிடி வீரர்கள் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாடு பிடிப்பதற்காக முன்பதிவு செய்யும் வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவருடன் வரும் உதவியாளரும் 2 டோஸ் தடுப்பு ஊசி செய்திருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.