சினிமா

AK 62 படம் நல்லா பண்ணனும் ஐயப்பா! சபரிமலையில் விக்னேஷ் சிவன்; அஜித் ரசிகர்கள் வேண்டுதல்!

Published

on

இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த வருடமும் சபரி மலைக்கு மாலை போட்டு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இருமுடி கட்டிக் கொண்டு எரிமேலி போகும் பாதையில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் சிவன் ஐயப்ப தரிசனத்துக்கு பிறகு அங்கேயே பட்டு வேட்டி, பட்டு சட்டையில் மாப்பிள்ளை போல போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் வேண்டுகிறாரோ இல்லையோ அவருக்கு பதிலாக ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் ஏகே 62 திரைப்படமாவது நல்லா வரணும் ஐயப்பா என கமெண்ட் பக்கத்தில் வேண்டி வருகின்றனர்.

முன்னதாக சாமி கும்பிடுவதற்கு முன்பாகவே சில மீடியா சேனல்கள் விக்னேஷ் சிவனிடம் மைக் நீட்டி ஏகே 62 அப்டேட் கேட்ட நிலையில் “சாமி சரணம்” என ஒரே போடாக போட்டு சினிமா பற்றிய பேச்சு சன்னிதானத்தில் வேண்டாம் என்கிற பதிலடியை கொடுத்து விட்டார்.

இயக்குநர் அ. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என அடுத்தடுத்து 3 படங்களில் நடித்து வந்த நிலையில், அடுத்ததாக உலகம் முழுவதும் பைக் ரைடு செல்லப் போகிறாரா இல்லை விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ஏகே 62 படத்தை ஆரம்பிக்க போகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கும் சீக்கிரம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு படங்களும் இந்த தீபாவளிக்கு மீண்டும் நேருக்கு நேர் மோத வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியான பிறகு நயன்தாராவை ஊர் அறிய திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் தனது தங்கத்தையும் உயிரையும் உலகையும் விட்டு விட்டு சபரிமலைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version