சினிமா
அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் முதல் விமர்சனம்!
ஒரு நல்ல சினிமா என்பது அந்த சினிமாவை பற்றி படக்குழுவினர் பேசக்கூடாது ரசிகர்கள் பேச வேண்டும், விமர்சகர்கள் பேச வேண்டும் என்ற ஒரு பொன்மொழி உண்டு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் வலிமை திரைப்படம். ‘வலிமை’ என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அஜித் தான். ஆனால் இந்தப் படத்தை முழுக்க முழுக்க தூக்கி நிறுத்துபவர் இயக்குனர் வினோத் என்பது எந்த அளவிலும் சந்தேகமில்லை.
சதுரங்க வேட்டை, தீரன்அதிகாரம்ஒன்று ஆகிய திரைப்படங்களில் திரைக்கதை எந்த அளவிற்கு பேசப்பட்டதோ, அதைவிட இரு மடங்கு ‘வலிமை’ படத்தின் திரைக்கதை பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளிநாட்டில் நடக்கும் ஒரு க்ரைம் பற்றியதுதான் என்பதும் அந்த கிரைம் சென்னையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகச் சிறப்பான திரைக்கதை, தேவையான அளவு சென்டிமெண்ட், பிரமாண்டமான ஸ்டண்ட் காட்சிகள், மிஷன் இம்பாசிபிள் படத்தில் கூட இந்த மாதிரி சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ள காட்சிகள் ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் அர்ஜுன் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் அஜித் நடித்துள்ளார். அவர் மதுரையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் வந்து இறங்கிய கிரிமினல்களை பிடிப்பதற்காக அவர் சென்னைக்கு வரவழைக்கப்டுகிறார் .
சென்னையை தங்கள் கையில் வைத்து ஆட்டிப்படைத்து வரும் அந்த கிரிமினல்களை அஜித் பிடித்தாரா? அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்ன? அஜித்துக்கு ஏற்பட்ட சோதனைகள், ஆபத்துக்கள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
அஜித்தை தவிர வேறு யாராவது மாஸ் நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான். அது ஏன் என்பது படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அதேபோல் ஹூமா குரேஷி கேரக்டரில் வேறு யாராலும் நடிக்க முடியாது என்ற அளவுக்கு அவர் தனது அதிகபட்ச நடிப்பை கொடுத்துள்ளார். கார்த்திகேயன் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆக்சன் காட்சிகளிலும் வசனம் பேசும் காட்சிகளிலும் தூள் கிளப்பியுள்ளார்.
இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவை சொல்லலாம். ஹாலிவுட் படங்களில் கூட இந்த மாதிரி கோணங்களில் படமாக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் படம் முழுக்க அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது.
படத்தின் பெரும்பாலான பகுதிகள் ஆக்சன் காட்சிகளிலும் இடையிடையே ஒரு சில சென்டிமெண்ட் காட்சிகளாகவும் ஒரு சில உண்மை காட்சிகளும் கலந்து திரைக்கதை அமைக்கப் பட்டிருப்பதால் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
மொத்தத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அந்த குறைகளை பெரிதுபடுத்த தேவையில்லை என்பதும் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து திரையுலக ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்பதுதான் இந்த படத்தை பார்த்த ஒவ்வொருவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.