இந்தியா
விமானக் கடத்தல் எச்சரிக்கை! நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு விமானம் ஒன்றைக் கடத்தப்போவதாகத் தொலைப்பேசி அழைப்பு வந்ததை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் அடுத்துப் பாகிஸ்தானைச் சர்வதேச நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பையில் உள்ள ஏர் இந்தியாவின் விமானக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த மர்ம தொலைப்பேசி அழைப்பில் “ஏர் இந்தியா விமானம் ஒன்றைப் பாகிஸ்தான் கடத்த திட்டமிட்டு இருப்பதாக” கூறியுள்ளனர்.
எனவே நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
பயணிகள், பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளிநபர்களைத் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்ட பிறகே விமான நிலயங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
விமானப் பயணிகள் மட்டுமில்லாமல், பயணிகளின் பை, உணவு கொண்டு செல்லும் வாகனங்கள், சரக்குப் போக்குவரத்து பகுதி, கடிதங்கள், பார்சல் என அனைத்தையும் தீவிரமாகச் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சரக்கு விமானங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் சமயம் என்பதால் மக்களுக்கு அரசு மீது அதிருப்தி ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.