தமிழ்நாடு
ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு!
கடந்த ஆறுமாத கால திமுக ஆட்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி ஊழல் வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த 1991 முதல் 96 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அவரும் அவருடைய கணவரும் பாபு ஆகிய இருவரும் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிக்கான அறக்கட்டளை ஒன்றை ரூபாய் 15.45 லட்சம் ஒதுக்கப்பட்ட தொகையில் எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யாமல் அந்த பணம் முழுவதையும் அமைச்சர் மற்றும் அவரது கணவர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஆக மூவர் பங்கு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்ற நிலையில் இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட கிருபாகரன் என்பவர் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவருடைய கணவர் பாபு ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சண்முகம் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.