தமிழ்நாடு
3ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி: அதிமுக-பாஜக கூட்டணி இழுபறி!
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளதை சமீபத்தில் இரு தரப்பு தலைவர்களும் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் இந்த கூட்டணி இழுபறியாக உள்ளது.
அதிமுக மற்றும் பாஜக தொகுதி உடன்பாடு குறித்து ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ள நிலையில் இன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்ததாகவும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவுடன் அமமுகவை இணைக்க வேண்டும் என்றும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 40 தொகுதிகள் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் அதிமுக தலைமை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதேபோல் பாஜகவுக்கு அதிகபட்சமாக 20 முதல் 25 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் அதிமுக தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறி நிலை இருப்பதாக தெரிகிறது.