தமிழ்நாடு
6 மாதத்தில் தமிழகம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் தமிழகம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது.
தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார். இவர் ஏற்கனவே நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இன்னிலையில் தான் இவர் கன்னியாகுமரி தொகுதியில் களமிறக்கப்பட்டார்.
பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடிக்க இவரால்தான் முடியும் என காங்கிரஸ் வசந்தகுமாரை களமிறக்கியது. கடந்தமுறையும் இவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களமிறங்கினார். ஆனால் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றார். இந்நிலையில் இந்தமுறை 627235 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார் வசந்தகுமார். பொன்.ராதாகிருஷ்ணன் 367302 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்ய உள்ளார். இதனையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட உள்ள நாங்குநேரி தொகுதிக்கு இன்னும் 6 மாதத்திற்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.