தமிழ்நாடு
வேலுமணியை அடுத்து இந்த அமைச்சர் வீட்டில் சோதனை: அமைச்சர் நாசர் தகவல்!
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் சமீபத்தில் சோதனை நடந்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களுடைய வீடுகளில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறிப்பாக 800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர்கள் வெளியிட்டதில் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் வேலுமணி கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் அவர்கள் வேலுமணி அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் வீட்டிலும் நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அதனை நிரூபித்து வெளியே வரட்டும் என்று முறைகேடாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சேர்த்து உள்ளதால் தான் அவர்கள் பதறுகின்றனர் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு ஒன்றரை டன் ஆவின் ஸ்வீட் எடுத்து சென்ற விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இந்த விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.